மலேசியாவின் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்திலிருந்து மலாய் மொழி நாவல் ஒன்று நீக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்ற நூற்றுக்கணக்கான மலேசிய இந்தியர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நாவல் இனத்துவேஷம் மிக்கது எனவும் சிறுபான்மை இனத்தவரை மிகத் தாழ்வாகக் காட்டுகிறது எனவும் இந்தியர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பிவருகின்றது.
அரசு இந்த நாவலை பாடத்திட்டத்திலிருந்து திரும்பிப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்ப்பாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
மலேசியாவிலுள்ள மூன்று இனங்களான மலாயர், இந்தியர் மற்றும் சீனர்கள் ஆகிய சமூகத்தவர்களின் வம்சாவழிகள் பற்றி இந்த நூல் விபரிப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால், இந்தியர்கள் பற்றிய குறிப்பில், அவர்களை மிக தாழ்ந்தவர்களாகக் காட்டவே இந்த நாவல் முற்படுவதாக எதிர்ப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Tags:
World
