லிபியாவில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை: ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள்



போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையும்படி லிபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.   லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்க கடாபி தனது ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார்.

போராட்டக்காரர்கள் தங்களது புரட்சி படையின் மூலம் ராணுவத்தை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். பெங்காசி, ஷாவியா, ராஸ்லனூப், அஜ்பாதியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.   இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் நகரங்களை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடந்த 11 நாட்களாக கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஷாவியா, ராஸ்லனூப் உள்ளிட்ட நகரங்கள் மீண்டும் அரசு வசமானது. நேற்று முன்தினம் அஜ்பாதியா நகரத்தை ராணுவம் கைப்பற்றியது. இது பெங்காசியில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.   இந்நிலையில், போராட்டக்காரர்கள் வசமுள்ள மிகப்பெரிய நகரமான பெங்காசியை மீண்டும் பிடிக்க ராணுவம் முன்னேறி வருகிறது.

இதற்கிடையே ராணுவ அதிகாரி பெங்காசியில் போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்டுள்ள “மாகாண தேசிய கவுன்சில்” என்ற அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்களிடம் இருந்த முக்கிய நகரங்கள் அரசு வசமாகி உள்ளது. அஜ்பாதியா நகரை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அடுத்த படியாக பெங்காசி நகரை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. நாங்கள் பெங்காசி மீது அன்பு வைத்துள்ளோம்.

போராட்டக்காரர்களிடம் இருந்து மனிதாபிமானத்துடன் மக்களை காப்பாற்ற நினைக்கிறோம். தேவையில்லாத சண்டை மூலம் நகரை ரத்த களாறியாக்க விரும்பவில்லை. எனவே ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Previous Post Next Post