பக்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது


வளைகுடா நாடுகளில் ஒன்றான பக்ரைனில் மன்னர் ஹமார்த்துக்கு எதிராக பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மன்னர் ஹமாத் தீவிரமாக இறங்கினார் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தலைநகர் மனாமாவில் உள்ள பியர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் புரட்சியாளர்கள் கூடினர். எனவே போராட்டத்தை தடுக்க சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து பக்ரைன் மன்னர் ஹமாத் ராணுவ உதவியை நாடினார்.

மேலும் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்த நிலையில், சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளிடம் இருந்து சுமார் 2 ஆயிரம் ராணுவ விரர்கள் பக்ரைன் வந்தனர். அவர்கள் பியர்ஸ் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.

மற்றும் எந்திர துப்பாக்கியால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் சுட்டது. மேலும் அங்கு போராட்டக்காரர்கள் அமைத்து இருந்து கூடாரங்களுக்கு தீ வைத்தது. இதனால் அவை எரிந்து சாம்பலாயின. அத்துடன் அங்கிருந்த மரங்கள், குப்பை கூளங்களும் எரிந்தன.

இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இருந்தும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஓடவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ராணுவம் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மனாமாவில் உள்ள சல்மானியா என்ற ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அதையும் ராணுவம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த புரட்சியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மூலம் அவர்களின் போராட்டத்தை ராணுவம் ஒடுக்கியது
Previous Post Next Post