சபரிமலை பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகரஜோதியின் உண்மைத் தன்மை குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகரஜோதி ஓர் அதிசய நிகழ்வா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்படுகிறதா என்பதை மக்களுக்கு சபரிமலை கோயில் நிர்வாகம் விளக்க வேண்டும்.
மகர ஜோதி தோன்றுவது உண்மையென நம்பி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கடவுள் நம்பிக்கையில் வரும் பக்தர்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மகர ஜோதி உண்மையென நம்பி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர்.
கடந்த 1999ஆம் ஆண்டு 53 பேரும், இந்தாண்டு 106 பேரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பொன்னம்பல மேட்டில் மகரஜோதி 3 முறை தோன்றி மறைவதில் மனிதர்களின் பங்கு இருப்பதாகவும், கேரள மின்வாரியத்துறை அதில் முக்கிய இடம் வகிப்பதாக சந்தேகப்படுகிறேன்.
ஆகவே செயற்கையாக உருவாக்கப்படும் மகர ஜோதியால் மூடநம்பிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று மனுவில் தீபக் பிரகாஷ் கூறியுள்ளார்.
மகரஜோதி உண்மைத் தன்மை குறித்து அறிக்கை அளிக்குமாறு கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Religion